இன்று காலை என் பெண்களின் பள்ளியில் எனக்கு காலை சிற்றுண்டி. ஐந்து வயதான என் இரட்டையர் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அவர்களே எடுத்துக்கொண்டு வந்து எனக்கு பரிமாறினர். ஒரு தாய் என்ற இடத்தில் இருந்து இதை நெனைக்கும் பொது மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அதே நேரத்தில், oru மகளாக என்னால் என் தாயை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இந்தியாவில் நான் வளர்ந்த காலத்தில், அன்னையர் தினம் என்று ஒருவரும் கொண்டாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. நானும் கல்லூரி வரை படிப்பை முடித்து பிறகு திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்தவள். இருவத்தி மூன்று வருடங்கள் என் தாயுடன் இருந்த நேரங்களில், அன்னையர் தினம் என்ற ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் நான் கொண்டாடி இருப்பேனா என்று தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே இன்று மிக வருத்தம். காரணம்? கீழே....
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த எங்கள் வீட்டில் என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். உடன் பிறப்புக்கள் என்று யாரும் கிடையாது. செல்லம் மிக அதிகம். தாத்தா பாட்டி, சித்தி, மாமா என்று எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அப்பொழுதெல்லாம் எனக்கு வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்க வில்லை. வீட்டில் நிறைய பேர் இருந்ததால் நான் ஒன்றும் செய்ததில்லை. பிறகு காலத்தின் கட்டாயத்தால் நான் என் பெற்றோருடன் தனியாக ஒரு வீட்டில் குடி புகுந்தோம்.
எனக்கும் பத்து வயதான காலம். என் அம்மா எப்பொழுதும் கொஞ்சமாவது வேல செய்ய கத்துக்கோடி இல்லேன்னா பின்னால கஷ்டம் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என் அப்பாவின் அம்மா எங்களுடன் இருந்தார். அவர் உடனே, இப்போ எதுக்கு அவள வேல செய்ய சொல்லறே. குழந்தை கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கு (!) போயிட்டு வருது, கல்யாணம் ஆச்சுன்னா இருக்கவே இருக்கே வேலை. இப்போ எதுக்கு செய்யணும். நீ சும்மா தானே ஆத்துல இருக்கே நீ பண்ணு. முடியலைனா எப்போ முடியர்தோ அப்போ பண்ணு என்பார் . மாமியார் என்பதால் என் அம்மாவால் ஒன்றுமே சொல்ல முடியாது. பேசாமல் இருந்துவிடுவார். எப்போதுமே சின்ன குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் யார் வாங்கி கொடுக்கிறார்களோ அவர்கள் மிகவும் பிடிதவர்களாகிவிடுவர். சிறிது வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்களக்கு சாதகமாக யார் பேசுகிறார்களோ அவர்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அந்த வயதில் எனக்கு என் பாட்டியை மிகவும் பிடித்திருந்தது.
சில வருடங்கள் கழிந்து என் பாட்டி என் சித்தப்பா வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் நாங்கள் மட்டும் தனியாக சில காலம் இருந்தோம். அப்பொழுதும் நான் எந்த வேலையிலும் ஒரு சிறு உதவி கூட செய்தது கிடையாது. எங்கேந்து செய்யரது? பழக்கமே இல்லையே! காலத்தின் கட்டயாத்தால் என் இன்னொரு பாட்டி (அம்மாவின் அம்மா) எங்களுடன் வந்து தாங்கும் நிலை ஏற்பட்டது. மீண்டும் எனக்கு அது மிக வசதியாகிப்போனது. பாட்டியும் நல்ல தெம்புடன் இருந்தால் எனக்கு ஒரு வேலையும் இருததில்லை.
கல்லூரி செல்லும் வயது வந்தவுடன் நான் என் சித்தி வீட்டில் தங்கி படித்தேன். அங்கு ஒரு சில வேலைகள் செய்வேன் அவ்வளவு தான். சனி ஞாயிறுகளில் வீட்டிற்கு வரும் போதும் கூட ஒரு கப் காபி கூட நான் என் அம்மாவிற்கு கலந்து குடுத்து கிடையாது. இதை எழுதும்போது என் கண்களில் கண்ணீர் நிறைகிறது. அந்த நேரங்களில் என் அம்மாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட ஆரம்பித்தது. ஹெர்னியா என்னும் நோயால் அவதி பட ஆரம்பித்தாள். அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், எங்களால் அதுவும் செய்து அவளை குணப்படுத்த முடியவில்லை.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சிறுவயது முதலே நான் என் பாட்டியை அம்மா என்று கூப்பிட்டு பழக்கம் இருந்ததால், என் அம்மா உடல் நலம் இன்றி தவித்த பொது கூட எனக்கு பெரிதாக ஒன்றும் வருத்தம் தோன்றவில்லை.கூட்டுக்குடும்பமாக இருந்ததால் எல்லோரும் என் பாட்டியை அம்மா என்று கூபிடுவார்கள். அதனால் நானும் அப்படியே கூப்பிட்டு பழக்க பட்டேன். என் அம்மாவின் கடைசி மூச்சு வரை நான் அவளை அம்மா என்று கூப்பிட வில்லை, கூப்பிடவும் தோன்றவில்லை. எத்தனை மோசமான பெண்ணாக இருந்திருக்கிறேன் என்று இன்று நெனைக்கும் பொழுது மனது துக்கத்தால் கனக்கிறது.
ஒரு தாயான பிறகு என் குழந்தைகளிடம் நான் என்ன என்ன எதிர்பார்கிறேனோ அதை எல்லாம் என் அம்மாவும் என்னிடம் எதிர்பார்த்திருப்பாள் என்று நெனைக்கும் பொழுது ஒவொருமுறையும் மனம் வலிக்கிறது. தன் குழந்தைகள் எத்தனை தவறுகள் செய்தாலும் எந்த தாயும் குழந்தைகளை மனசார கடிந்து பேசவோ, சபிக்கவோ மாட்டாள். அதனால் என் அம்மாவும் நான் செய்த தவறுகளை மன்னித்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இப்படி வருதபடுபவள் நான் மட்டும் அல்ல என்பது தான் சத்தியமான உண்மை. இன்றும் நம் நாட்டில் கூட்டு குடும்பங்கள் இருக்கிறது. அங்கு வளரும் குழந்தைகளுக்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் எல்லோருடனும் நட்பு, தாத்தா, பாட்டியின் அரவணைப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், பேரன் பேத்தி என்று வரும் பட்சத்தில், என் பாட்டிகள் நடந்துகொண்டது போல் தான் எல்லா பாட்டிகளும் நடந்து கொள்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆயினும் ஒரு சிலர் ஒரே வீட்டில் இருந்தாலும் பெற்றோர் குழந்தைகளை கண்டிக்கும் விஷயத்தில் தலை இடுவதில்லை. என்னை பொறுத்தவரை நான் அவர்களை தலை வணங்குகிறேன். நான் என் அம்மாவிடன் நடந்துக்கொண்டது போல் என் பெண்கள் என்னிடம் நடக்க மாட்டர்கள் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழக்கை!
இத்தனை விஷயத்திலும் எனக்கு ஒரே சந்தோசம் என்னவென்றால் என் இரட்டையர்களில் ஒருத்தி என் அம்மாவை அப்படியே உரித்து வைத்து போல் இருக்கிறாள். குரல், முக ஜாடை, நடை எல்லாமே அப்படியே என் அம்மாவை பார்ப்பது போலவே இருக்கிறது. என் அம்மா என்னை விட்டு போனாலும், என் பெண் வடிவில் நான் அவளை தினமும் பார்க்கிறேன்.
ஆகவே பெண்களே உங்கள் அம்மா கூறுவதை ஒரு நிமிடம் நின்று காது கொடுத்து கேளுங்கள். அதில் ஒன்றும் நமக்கு குறைந்து விடப்போவதில்லை. அவர்கள் கூறும் அறிவுரையை நீங்கள் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை. ஆனால் காது கொடுத்து கேட்பதில் தப்பில்லை. பின் நாளில் என்னைப்போல் வருதப்பட்மாடீர்கள்.
Friday, May 8, 2009
அன்னையர் தினம்
Labels: அன்னையர் தினம்
Thursday, January 22, 2009
ஒபாமா - ஊன்றுகோல்
நான் எதற்காக இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இந்த தலைப்பு இந்த பதிவிற்கு பொருந்தும் என்ற ஒரு எண்ணம். ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் - உலகின் தலை சிறந்த நாடுகளில் முதலிலில் இருக்கும் (இருந்த) அமெரிக்காவிற்கு ஜனாதிபதி என்ற எண்ணம் மனதிற்குள் வரும் பொழுது நிஜமாகவே ஒரு புத்துணர்ச்சி வருகிறது. இன்று அமெரிக்காவில் பிறந்த மற்ற நாட்டு குழந்தைகளுக்கு இது ஒரு ஊன்றுகோல் போலவே என் கண்ணிற்கு தோன்றுகிறது. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு ஒபாமா ஒரு சிறந்த உதாரணம். இன்றும் (சென்ற வாரம் வரை) ஒரு சில இடங்களில் கறுப்பின மக்களை கண்டால் ஒதுக்கும் பழக்கம் நம்மிடையே இருந்தது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
கடந்த ஒரு ஆறு மாதங்களாக இங்குள்ள நூலகத்திற்கு ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கா பெண்மணி தன் குழந்தையுடன் கதை நேரத்திற்கு வருவார். நானும் அவரை ஆறு மாதங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர் எங்கு சென்று அமர்கிராரோ அதற்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் எழுத்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுவார். இதை போன்ற சம்பவம் ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை நான் என் கண் முன்னாள் பார்த்திருக்கிறேன். அவரும் அதை எதிர்பார்த்தவர் போல் சிரித்துக்கொண்டே புறக்கணித்து விடுவார். நான் அவரிடத்தில் இருந்தால் என்னால் அவரைபோல் பெருந்தன்மையுடன் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு நாள் அவரிடம் பேச்சு கொடுத்தேன். கணவரின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் குடி இருந்த பகுதிக்கு வந்திருக்கார். நன்றாக பேசக்கூடியவர், மற்றும் ஆசிரியையாக சிறிது காலம் வேலை பார்த்தவர் என்று கேள்விப்பட்டு மிகுந்த ஆச்சர்யம் எனக்கு. ஆனால் அடுத்த வார கதை நேரத்தில் அவருக்கு அப்படி ஒரு நிகழ்வு நடக்காது என்று நான் நெனைக்கிறேன். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படி பல இன்னல்களை தாங்கிக்கொண்டு ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜனாதிபதியாகி இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதிலிருந்து என் பெண்களுக்கும் ஒரு நாள் நாடாளும் அதிகாரம் வந்தாலும் வரலாம் என்று நெனைக்கும் பொது நிச்சயமாக பெருமையாக இருக்கிறது.
Labels: Barack Obama, President
Monday, August 4, 2008
Kuselan Movie review in my words
சென்ற ஞாயிறு மாலை பொழுது போகாமல் ரஜினிகாந்த் அவர்களின் குசேலன் திரைபடம் சென்று பார்த்தோம். சென்று திரைப்படம் பார்த்தோம் என்பைதை விட பணத்தை அனாவசியமாக செலவு செய்தோம் என்று கூறி வருத்தப்பட்டு கொள்ளும் அளவுக்கு மகா கேவலமாக இருந்த ஒரு படம். சூப்பர் ஸ்டார் அவர்கள் இனிமேலாவது சினிமா துறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இது என்பது என்னுடைய சொந்த கருத்து. க்ளோஸ்அப் காட்சிகளில் அவருடைய முகத்தை பார்பதற்க்கே மிகவும் கஷ்டமாக இருந்தது.
மகாபாரதத்தில் கண்ணனை குசேலன் சென்று பார்த்து உதவி பெறுகிறார். இந்த திரைப்படத்தில், குசேலனாக இருக்கும் பசுபதி குபேரனாக வாழும் ரஜினியை பார்பதற்காக பெருமுயற்சி எடுக்கிறார். அவருடைய ஒவொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. கடைசியில், குபேரன் குசேலனை காண வருவது தன் கதை. இதில் ரஜினி போன்ற பெரிய நடிகருக்கு வேலையே இல்லை என்பது என் கருத்து.
படத்தில் மனதில் நிற்கும் கதாபாத்திரம் பாலுவாக வரும் பசுபதி உடையது. நல்ல நடிப்பு. மூன்று குழந்தைகளுக்கு அப்பா என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது. அதே போல் மீனா மிகவும் அழகாக இருக்கிறார். பத்தாவது படிக்கும் ஒரு பெண்ணிற்கு தாய் என்பதை நம்ப முடியவே இல்லை. ஒரு விஷயம் மனதை நெருடுவது என்னவென்றால், காபி கலப்பதர்க்கே பால் இல்லை, காலை உணவுக்கு இஞ்சி என்று வாழ்க்கை ஓட்டுபவர்கள், நன்றாக ஐப்ரோ செய்து கொள்ள எங்கேந்து பணம் வந்தது? எனக்கு தெரிந்து இதற்க்கு ஒரு பதினைந்து ரூபாயாவது ஆகும். அந்த பணத்தில், அரிசி வாங்கி சாதம் வடித்து சாப்பிடலாமே? அடுத்து அவர் உடுத்தி வரும் புடவை. அரசுத்துறையில் வேலை செய்யும் பெண்கள் கூட அந்த அளவுக்கு பருத்தி புடவை உடுத்துவார்களா? என்பது சந்தேகமே.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு பாடல் கேட்ட ஞாபகம். "கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே" என்ற வரி. இந்த வரி நயந்தாரவிர்க்கு நன்றாக பொருந்தும். அவருடைய துணிக்காக இந்த படத்தில் அதிகம் செலவழித்திருக்க மாட்டார்கள் என்று நெனைக்கிறேன். இதில் என் வருத்தம் என்னவென்றால் நாங்கள் இந்த திரைப்படம் செல்லும் பொழுது என் மாமனாரும் வந்திருந்தார். நயன் தாரா இருக்கிறார் என்பதற்காகவே ஒரு மழையில் நனையும் பாடல். எப்போ கீழே கழண்டு விழுமோன்னு டென்ஷன் கிளப்பும் ஒரு மிடி போட்டுக்கொண்டு ஆடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார்.
வடிவேலு, சந்தானம் போன்றோர் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல. வடிவேலுவின் நகைச்சுவை ஓரளவுக்கு தேவலை. அதிலும் அவருடைய மீசை நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. ரயில்வே ட்ராக்கில் சிக்னல் போட்டு, நிற்கும் பஸ் வேன் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு மொபைல் சலோன் என்ற பெயரில் அலம்பல் செய்கிறார். மனைவியுடன் இணைவதற்கு அவர் படும் பாடுகள் அனைத்தும் கன்றாவி. இந்தக்காலத்தில் கணவர்கள் அப்படி எல்லாம் கஷ்டபடுகிரார்கள என்பது யோசிக்க வேண்டிய விஷயம். கடைசி காட்சியில் சென்டிமென்டாக பேசி தமாஷ் செய்கிறார் சூப்பர் ஸ்டார். ஆகா மொத்தம் டிகெட்டிற்கு நாற்பத்தி ஐந்து டாலர் காண்டீனில் சாபிடதற்கு ஒரு முப்பது டாலர் என்று ஒரு எழுவத்தி ஐந்து டாலர் பணம் நஷ்டம். ரஜினி படத்தை பற்றி இப்படி ஒரு விமர்சனம் எழுத கஷ்டமாக இருந்தாலும் இது தான் உண்மை. என்னவரின் விமர்சனத்தை படிக்க இங்கே click செய்யவும்.
Labels: movie, rajinikanth
Thursday, June 26, 2008
Bloggerwave!
Bloggerwave - ஒரு மிக அருமையான வலை தளம். இதன் மூலம் என் போல் ப்ளாக் வைத்திருப்பவர்கள் சிறிது பணம் சம்பாதிக்க எளிய முறை. இந்த வலைத்தளம் ஐரோப்பிய நாட்டின் மிகப்பெரிய அட்வேர்டிசிங் கம்பெனி.
இந்த Bloggerwave வலைத்தளத்தில் நான் ப்ளாகை ரெஜிஸ்டர் செய்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தேன். அடுத்த நாள் என்னுடைய ப்ளாகை அவர்கள் அப்புருவ் செய்து பதில் அனுப்பினர். பின்னர் என்னுடைய முதல் போஸ்டை எழுதுவதற்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தனர். விருப்பம் இருப்பவர்கள் Bloggerwave வலைத்தளத்தில் சேர்ந்து சிறிது பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
Labels: Bloggerwave
Friday, June 20, 2008
Dasavatharam Movie Review in my words!
திரு. கமல்ஹாசன் அவர்களின் ரசிகை நான். அவருடைய அனைத்து திரைப்படங்களையும் பார்த்திருக்கும் எனக்கு அவருடைய தசாவதாரம் திரைப்படம் பார்த்து சிறிது ஏமாற்றம். முதலில் அந்த திரைப்படத்தில் பத்து அவதாரத்திற்கு என்ன அவசியம் என்றே எனக்கு புரியவில்லை.
முதல் பாத்திரம் நம்பி. அந்த பாத்திரத்தில் எனக்கு பிடித்த ஒன்று கமலுடைய வசன உச்சரிப்பு. மிக மிக அருமை. அடுத்து எனக்கு தெரிந்து நாத்திகரான கமல் மிக அருமையாக ஓம் நமோ நாராயணாய என்று உச்சரிப்பது. அது முதலில் அவர் குரலா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இதில் என் கவனத்தை ஈர்த்தது நெபோலேஅன் கதாபாத்திரம். அவர் எதற்காக யானை மீதேறி அமர்ந்து இருக்கிறார் என்றே புரியவில்லை. சோழ மன்னன் என்றால் யானை மீதிருந்து இறங்கக்கூடாது என்று இருக்கிறதா என்றே புரியவில்லை. அடித்து அசின் கதாபாத்திரம். அசின் கமலிடம் குழந்தைகாகவாவது நம: சிவாய என்று சொல்லுங்கள் என்று கூறுகிறார். எல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும், கணவர் இறந்தவுடன் குழந்தையை அவரும் மறந்துவிட்டு மண்டை மோதி எதற்கு இறக்கிறார் என்று புரியவில்லை. இதுதான் கணவருடன் உடன் கட்டை ஏறுவதோ?
அடுத்து கோவிந்த் பாத்திரம். இவர் சாதரண உப்பை எப்படி மறந்தார் என்று புரியவில்லை. மிகப்பெரிய விஞ்ஞானி உப்பின் பெயரை மறந்தார் என்பதே மிகவும் வேடிகயான ஒன்று. அடுத்து அவருடைய இந்தியா பயணம், சிதம்பரம் பயணம், இப்படி அடுத்து அடுத்து அவர் ஒவ்வொரு இடத்தில் பறப்பது முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு நன்றாக இருந்தாலும் பிறகு சலிப்பு தட்டி விடுகிறது. ஒரு சந்தோஷமான விஷயம் என்ன வென்றால், கமல் படத்தில் எப்பொழுதும் இருக்கும் விரசமும், உதட்டு முத்தமும் இதில் இல்லை.
அடுத்து கிருஷ்ணவேணி பாட்டி. இந்த கதாபாத்திரத்திற்கு என்ன அவசியம் என்றே எனக்கு புரியவில்லை. பார்பவரை எல்லாம் கட்டைல போறவனே என்று கூறி வேறுபெற்றுகிறார். வீதியில் சுவாமி வந்திருக்கும் பொது இவருக்கு மட்டும் எப்படி நடக்க இடம் இல்லாமல் போனது என்று தெரியவில்லை மேலும், அங்கு சூழ்ந்திருபவரின் தோள்களில் ஏறி நர்த்தனம் ஆடுகிறார்.
அடுத்து அமெரிக்கா ஜனாதிபதி. இந்த கதாபாத்திரத்தின் அவசியம் புரியவில்லை. அதேபோல், Nacl - அதன் அர்த்தம் தெரியாமல் இருப்பது ஆச்சர்யம்.
அடுத்து நாயுடு - படத்தின் மிக பெரிய பலம். சிரிக்க வைக்கும் ஒரே கதாபாத்திரம். கமல் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக செய்திருக்கிறார்.
அடுத்து சைனீஸ் கமல் - ஜனாதிபதியை போல் இந்த கதாபாத்திரத்தின் அவசியம் எதற்கு என்றே புரியவில்லை. தேவை இல்லாத கதாபாத்திரம்.
அடுத்து வில்லன் - இவர் பறந்து பறந்து அடிக்கிறார். ஒவ்வொரு கட்டிடமாக ஏறி பறக்கிறார். அவருடைய முதலாளி போலீசிடம் சிக்கியது கூட தெரியாமல் ஹீரோ கமலை துரத்துகிறார்.
அடுத்து - உயர்ந்த மனிதன் - ஒரு இ மெயிலில் படித்தேன். இந்த உயர்ந்த மனிதனை வாமனவதாரதுடன் இணைத்து எழுதி உள்ளனர். எனக்கு அதை படித்து மக்களில் மூடத்தனத்தை நினைத்து சிரிப்பு தன் வந்தது. சுனாமி வந்த பொழுது மசூதியில் மக்கள் அனைவரும் சேர்ந்த போது அவர் ஏதோ காப்பற்றுவது போல் இரண்டு கையையும் பெரிதாக விரிக்கிறார். என்ன அர்த்தம்?
அடுத்து பூவராகன் - இவர் சமூக சேவகர். இவர் கதாபாத்திரமும் அருமை. திருநெல்வேலி தமிழில் வெளுத்து கட்டுகிறார். மிக அருமையான கதாபாத்திரம்.
அடுத்து அவதார் சிங்க் - இந்த கதாபாத்திரமும் எதற்கு என்று தெரியவில்லை. திடீர் என்று வருகிறார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார், பாட்டு பாடுகிறார், ரத்தவாந்தி எடுக்கிறார், கடைசியில் குண்டு பாய்ந்து, அந்த குண்டின் மூலம் அவருடைய கான்செர் குணமடைந்து விடுகிறது. மூச்சு வாங்குகிறது எனக்கு. எதற்கு எதெல்லாம்?
ஆகா மொத்தம் கமல் அவர்களின் ரசிகையாக இருந்து, அவருடைய திரைபடத்தை பற்றி இப்படி ஒரு விமர்சனம் எழுத மிகவும் சங்கடமாக இருந்தாலும், இருப்பதை தானே எழுத முடியும்.
சட்டியில் இருந்தால் தானே அகபையில் வரும் !!!!!!!!
Labels: dasavatharam, Kamal Hassan
Friday, May 9, 2008
Saturday, April 19, 2008
Women after Kids !!
என் கஸின் வீட்டிற்கு சென்று வந்த உடன் இந்த போஸ்ட் எழுத உட்கார்ந்தேன். எழுதுவதற்கு காரணம் சில உள்ளது. என் கசினுக்குஇரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதை பார்பதற்கு நாங்கள் சென்றோம். சில மணி நேரம் அங்கே கழித்தோம். என்னுடைய மாமா மாமி பிரசவத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடனும் சிறிது நேரம் கழித்தோம்.
ஆரம்பித்த வேலையே விட்டு எங்கோ போகிறேன். நான் கொஞ்சம் மெலிந்த உடல் உடையவள். திருமணத்திற்கு முன் மிகவும் சின்ன பெண் போல் இருப்பேன். இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் சிறிது உடல் பூசியது போல் உள்ளது. அதிலும் சி - செக்ஷன் ஆனதால், போன வருடம் சிறிது அடி வயிறு பெருக்க துவங்கியது. உடல் எடை கூட துடங்கியது. இந்தியாவிலிருந்து தைத்து கொண்டுவந்த துணிகள் அனைத்தும் கொள்ளவில்லை. அப்போது என் உணவு வகைகளை மாற்றி உண்ண துவங்கினேன். காலையில் காண் பிளக்ஸ், வைட் பிரெட் சாபிட்டுவந்த நான் எனது காலை உணவை ஒட்சாக மாற்றினேன். மேலும் (என்னவரின் ஆலோசனைப்படி) உடற்பயிற்சி செய்ய துவங்கினேன். முதலில் சிறிது கடினமாக இருந்தாலும் இப்போது கடினமாக தெரியவில்லை. சிறிது தொட்ட வேலை செய்கிறேன். இவை அனைத்தும் மிக மிக எளிதாக அதே நேரம் எனக்கு, என் உடலுக்கு பயிற்சியாக இருக்குமாறு செய்கிறேன். இதனுடன், இரண்டு குழந்தைகளை சமாளிப்பதும், வீட்டு வேலை, துணி துவைத்தல் என்று என் நேரமும் நல்ல படியாக சென்று கொண்டு இருக்கிறது.
இப்போது உடல் நான் சொல்லவதை கேட்கிறது. அடிவயிறு நன்றாக குறைந்துள்ளது. அரிசி சாதம் சாபிடுவதையும் சிறிது குறித்துள்ளேன். சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதம் என்று சென்றுகொண்டிருந்த என் பழக்கம், இப்போது சாம்பார், தயிர் மற்றும் காய்கறி அல்லது ரசம், தயிர் மற்றும் காய்கறி, பழவகைகள் சிறிது என்று சாப்பிட்டு வருகிறேன்.
மாமாவின் பெண் வீட்டிற்கு சென்ற பொது, மாமி சாதம் பரிமாறும் பொழுது நிறைய நிறைய சாதம் போட்டு சாபிடுமாறு வற்புறுத்தினார். நான் என் உணவு பழக்கத்தை கூறியவுடன், அவர்கள் (மாமாவும் மாமியும்) சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி சாப்பிட்டால் எங்கேந்து உடம்பு பெருக்கர்த்து என்ற கேள்வி வேறு?
இதற்கு மேல், மாமியோ, இரண்டு குழந்தை பிறந்து விட்டது இன்னும் எதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு என்ற கேள்வி வேறு. இரண்டு குழந்தை பிறந்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை - எல்லாம் தன் முடிஞ்சு விட்டதே என்னும் எதுக்கு உடம்பை அழகா வெச்சுக்கணும் என்ற எண்ணம் இன்றும் நம் நாட்டில் வழக்கத்தில் இருப்பது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம். எத்தனை குழந்தை பிறந்தாலும் நம் உடலை நாம் தன் பார்த்துக்கொள்ள வேண்டும் பிற்காலத்தில், நம் குழந்தைகளுக்கு நம்மால் எந்த விதமான தொந்தரவும் இருக்க கூடாது என்ற எண்ணம் இன்று நம் மக்களிடையே (ஒரு சிலரிடம்) இருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. நம் நாட்டில் மும்பு இருந்தது போன்று கூட்டு குடித்தனம் என்ற வழக்கம் இன்று மிகவும் குறைந்து வரும் வேளையில், பிற்காலத்தில் நமக்கு உடலுக்கு எந்த நோய் நொடியும் வராமல் இருக்க இப்போதே சில வழிமுறைகளை பின் பற்றுவது தவறு இல்லை என்பது என் கருத்து.
இவை அனைத்திற்கும் மேல், அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது, மாமாவின் கமெண்ட் - இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில், உன் பெண்களுடன் நீ வெளியில் செல்லும் பொழுது எல்லோரும் உன்னை அவர்களின் அக்காவா? என்று கேட்பார்கள் அதனால் இப்போதே கொஞ்சம் உடம்பை ஏற்றும் வழியை பார் என்றார். நான் அவரிடம்மற்றவர் அப்படி கூறுவது எனக்கு ஒரு கம்ப்ளிமேன்ட் என்று சொல்லி மேலும், இபோதுள்ள பெண் குழந்தைகள் தங்கள் அம்மா சிறிது நாகரிகம் தெரிந்தவர்களாகவும், அவர்களுடன் ஜிம், யோகா, போன்ற இடங்களுக்கு வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள் அதற்கு நான் என் உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு இப்படி இருப்பதே பெட்டேர் என்று கூறிவிட்டு வந்தேன்.
இதில் என் மாமா மாமியின் தவறு ஒன்றும் இல்லை. நம் நாட்டில் இன்றும் பல பெண்கள் குழந்தை பிறந்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது. அதற்கு மேல் நாம் நம் உடலை கவனித்துக்கொள்ள வேண்டியது இல்லை என்ற எண்ணம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது மிகவும் தவறு. அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் நமக்காக நம் உடலை காக்கவேண்டும். நாம் காலை எழுந்து பல் துலக்கும் பொழுது நம் முகத்தை, நம் உடலை கண்ணாடியில் பார்க்கும்பொழுது, நமக்கு ஒரு புத்துணர்ச்சி வரவேண்டும். அப்படி வந்தால் தன் நம்முடைய அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
குமுதம் புத்தகத்தில் ஒரு சில வாரங்கள் முன்பு ஒரு செய்தி படித்தேன். சென்னையில் லே மெரிடியன் ஹோட்டல் இல் நடுத்தர வர்க்க குடும்ப பெண்களுக்கு ஒரு ஜிம் துவங்கி நடத்தி வருகிறார்கள். நம்மால் வீட்டில் உடல் பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று சிறிது நேரம் பயிற்சி செய்து வருவது நல்லது.
எனக்கு தெரிந்த பெண் ஒருத்திக்கு குழந்தை பிரசவத்திற்கு அவளுடைய அம்மா வந்திருந்தார். அவர் குழந்தை பிறந்தவுடன் அவளை ஒரு உடற்பயிற்சியும் செய்ய விடாமல் (முதல் ஆறு மாதத்திற்கு) தானே எல்லா வேலையும் செய்து பார்த்துக்கொண்டு இருந்தார். குழந்தையாய் பார்க்க இதே போல் நானும் என்னவரும் சென்ற பொழுது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. அப்போது அந்த பெண்ணிற்கு வயிற்றில் ஒரு குழந்தை இருப்பது போல் பெருத்து இருந்தது. இங்கு மருத்துவர்கள் அவளை உடற்பயிற்சி செய்ய கூறியும், அம்மாவின் பேச்சை கேட்டு (நம்மூர்ல அதெல்லாம் வழக்கம் இல்லை பச்ச உடம்புகாரிய எப்படி வேலை வாங்கறது. எங்கேந்து அவளால உடற்பயிற்சி செய்யமுடியும் என்று கூறி ஒன்றும் செய்ய விடவில்லை), பேசாமல் நன்றாக சாப்பிட்டு தூங்கி இருக்கிறாள். இன்றும் (நன்கு வருடத்திற்கு பிறகு) அவளுக்கு வயிறு பெருத்து, உடல் பெருத்து ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. மருத்துவர்கள் அனைவரும் padithuvittu தன் அந்த வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்பது நம் மக்களுக்கு சில நேரங்களில் மறந்து விடுகிறது. எல்லா இடத்திலும், எல்லா வ்யாதிக்கும் பாட்டி வைத்தியம் சாத்தியமாகும் என்பது மூட நம்பிக்கை.
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்ற திருமூலரின் திரு மந்திரத்தை நாம் அனைவரும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, நம் உடலை பேணி காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

